இலங்கையின் 40 வருட கால வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில், அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittances) 2025 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 8,076 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (8.07 பில்லியன் டொலர்கள்) புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன் இலங்கை ரூபாய் பெறுமதி 2,432 பில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22.8% வளர்ச்சியாகும். 2024 ஆம் ஆண்டில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 6,575 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
ஒரு மாதத்தில் பெறப்பட்ட அதிகூடிய வருமானமும் கடந்த டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது. அந்தத் தொகை 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு அமைய, தரம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப பணியகம் மேற்கொண்ட பல நடவடிக்கைகளே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். அதற்கமைய, கடந்த ஆண்டில் 310,000-இற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.






