கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வீதித் தடைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளைச் சீர்செய்து விரைவில் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாடளாவிய ரீதியில் விநியோகத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சாதாரண நாட்களில் விநியோகிக்கப்படும் 75,000 சிலிண்டர்களின் எண்ணிக்கையை இன்று 91,000 ஆக அதிகரித்து, தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் நீர் வழங்கல் சபையால் தனித்துச் சீர்செய்ய முடியாத 5 நீர் வழங்கல் திட்டங்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உதவியுடன் சீர்செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள 2,947,833 வீட்டு நீர் இணைப்புகளில், மேலும் 387,964 இணைப்புகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கண்டி (66.8%), கேகாலை (75.09%), குருநாகல் (41.34%), புத்தளம் (52.82%) ஆகிய மாவட்டங்களில் நீர் வழங்கல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி 20% தொலைபேசித் தொடர்பாடல் தடைப்பட்டுள்ளது. இதில் அதிக பாதிப்பு புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கப்பட்டவுடன் இவை வழமைக்குத் திரும்பும்.






