மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘அவிஷ்க புத்தா’ எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் படகு நேற்று (10) விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது படகிலிருந்த 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகை, மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பாக பதிவாகியுள்ளது.






