அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை ஒரு நேர்மறையான நடவடிக்கையாகக் கருதினாலும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி குற்றவியல் வழக்கினை தாக்கல் செய்வதே அவசியமானது என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் பாதிரியார் சிரில் காமினி, இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
2019 ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பணியாற்றி இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட நிலந்த ஜயர்த்தனவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு சமீபத்தில் தீர்மானித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கையின் போது குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து தங்களது நிலைப்பாட்டை விளக்க கத்தோலிக்க திருச்சபை இன்று (21) ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.