ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு வடக்கேயும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கேயும் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது.
கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.
இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள், சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்காவை சுற்றிவரும் கடல் வழி அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக வரும்.
இல்லையெனில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கொண்டு வரப்படலாம். இதற்கு செலவுகள் அதிகமானாலும், நம்பிக்கையான வழித்தடங்களாகும்.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது