அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று, அந்நாட்டு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்திருக்கிறது. அப்படி மட்டும் நடந்தால், சர்வதேச அளவில் அணு ஆயுத போர் வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் அணு ஆயுதம் நோக்கி போகக்கூடாது என்றுதான் தாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலின் செயல்பாடுகள், ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி வேகமாக தள்ளியுள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடர்பாளர், இப்ராஹிம் ரெஸாய் இது குறித்து கூறுகையில்,
“அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) இருந்து விலகுவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா விவாதத்தில் இருக்கிறது. ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நாங்கள் இதை செய்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
யுரேனியத்தின் தடயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் ‘சர்வதேச அணுசக்தி முகமை’ ஒரு நாட்டின் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது இதுவே முதல் முறையாகும். அதாவது, “NPT ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் பல முறை தவறியிருக்கிறது. மட்டுமல்லாது ஈரானில் பல இடங்களில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து அந்நாடு நம்பகமான விளக்கங்களை அளிக்கத் தவறிவிட்டது.
2019 முதல், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவில்லை. எனவே, அந்நாட்டின் அணுசக்தி பயன்பாடு, அமைதிக்கானது என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. அணுசக்தி விஷயங்களில் உடனடியாக, முழு அளவில எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை அப்படி செய்ய தவறினால், இந்த விஷயத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பரிந்துரைக்க நேரிடும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு நாட்டின் மீது IAEA இப்படியான கறார் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை. இது ஈரானுக்கு கவுரவ பிரச்சனையாக மாறியிருக்கிறது.
எனவேதான் ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறது. இது மட்டும் நடந்தால் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது.
ஈரான் அணு ஆயுதம் உருவாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற மற்ற நாடுகளும் தங்கள் பாதுகாப்பிற்காக அணு ஆயுதம் தயாரிக்க தொடங்கும்.
வட கொரியா ஏற்கெனவே NPT-லிருந்து விலகியுள்ளது. எனவேதான் அந்நாடு தற்போது கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது.
ஈரான் விலகினால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவை ஈரானின் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும். ஈரான் சர்வதேச சமூகத்தால் மேலும் தனிமைப்படுத்தப்படும்.
வெளியுறவுத்துறை உறவுகள் பாதிக்கப்பட்டு, சர்வதேச அரங்கில் அதன் செல்வாக்கு குறையும்.
“மட்டுமல்லாது, ஈரான் அணு குண்டை தயாரிக்கிறது என்று சொல்லி அமெரிக்காவே நேரடியாக தாக்குதலில் இறங்கும். இப்படியெல்லாம் நடந்தால் மத்திய கிழக்கு முழுவதும் பற்றி எரியும். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.