இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் பரவலடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, நோய் அறிகுறிகளின் அடிப்படையில் விரைந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக வெகுவிரைவாக பரவலடைந்துவரும் இந்த தொற்றுநோய் நிலைமை தற்போது வரையில் 109 வரையான நாடுகளுக்கு ஊடுருவியுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 78 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த தொற்று நோய்க்குள்ளான நபரொருவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பை பேணும் ஆரோக்கியமாக இன்னுமொரு நபருக்கு இந்த வைரஸ் தொற்றும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதுடன்,
இந்த நோயினால் ஏற்படும் கொப்புலங்கள் மற்றும் புண்களில், ஏனைய உடற் கழிவுகள், பாதிக்கப்பட்டவரின் சுவாச வாய்கள் மற்றும் நோயாளர் பயன்படுத்தும் படுக்கை போன்றவற்றினூடாக இந்த வைரஸ் தங்கியிருக்கலாம்.
பொதுவாக இந்த வைரஸ் உடலுக்குள் ஊடுருவி 521 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும் என்பதுடன், இதன் அறிகுறிகளாக காய்ச்சல், காதோரங்களில் வீக்கம், இடுப்பு வலி, கடுமையான உடல் சோர்வுடன் கூடிய கொப்புலங்கள் என்பவை உள்ளடங்கும்.
பொதுவான காய்ச்சல் ஏற்பட்டு 13 நாட்களாகும்போது கொப்புலங்கள் தென்பட ஆரம்பமாகும் என்பதுடன் பிரதானமாக முகம் மற்றும் கைகள், உடல் அடிப்பாகங்களில் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
இதற்கு மேலதிகமாக வாய், பாலுறுப்புகள் மற்றும் கண்களை அண்மித்த பகுதிகளில் வலியை ஏற்படுத்தக்கூடிய கொப்புலங்கள் அல்லது புண்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
இந்த நோயை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு இரத்தப் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.