இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“இலங்கையால் டீசலுக்கான பணத்தை செலுத்த முடியாத காரணத்தினாலேயே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த தாமதமாகியது. அரசாங்கம் தற்போது டீசலுக்கான பணத்தை செலுத்தியுள்ளதுடன் டீசல் தற்போது நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றது.
இந்த டீசல் தெகை ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் வரவில்லை என்றால், அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க நேரிடும்” எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக சபையுடன் இணையத்தளம் வழியாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில்,
“இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகளை வாசித்தேன்.
சாதாரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் போன்ற நாடுகள் இவ்வாறு கடனுக்கு எரிபொருளை வழங்குவதில்லை. எனினும் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என பிரார்த்திப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.