ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறும் IPL கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீரர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி நிறுத்தப்பட்டது.
29 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 31 போட்டிகள்; எஞ்சியுள்ளன.
இந்த நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு இராஜியத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி ஐ.பி.எல். போட்டி மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகவுள்ளது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரை நேரில் காண இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை தெரிவித்துள்ள ஐ.பி.எல். நிர்வாகம், ‘கொரோனா பிரச்சினையால் சிறிய இடைவெளிக்கு பின்னர் இரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தர இருப்பதன் மூலம் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக இருக்கும்’ என தெரிவித்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறை மற்றும் ஐக்கிய அரபு இராஜிய அரசின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு போட்டி நடக்கும் எனவும் 3 இடங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இரசிகர்களே அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறியுள்ளது.
ஆனால் எத்தனை சதவீத இரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் ஒவ்வொரு மைதானத்தின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவுக்கு இரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பு குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.