கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியதால், கொழும்பு நகரவாசிகளுக்கு மரணம் ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறியுள்ளது.
“இரண்டடிக்கு இரண்டடி அளவில் உள்ள ஒரு சிறிய நிலத்தை மட்டுமே ஒருவர் பெற முடியும், இறந்தவரின் சாம்பலைக் கொண்டு ஒரு கலசத்தை புதைக்க மட்டுமே முடியும்.” என பெயர் குறிப்பிட விரும்பாத CMC இன் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2018 இல் கல்லறைக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவிருந்ததாகவும், ஆனால் சபை உறுப்பினர்கள் அந்த ஆண்டு சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குள் சுடுகாட்டுக்கான கட்டணம் கொழும்பு நகரவாசிகளுக்கு 1000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாகவும் வெளியாட்களுக்கு 20,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக CMC இன் முன்னாள் உறுப்பினர் அல்பிரட் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளேன். இந்த விடயம் மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவிடம் தெரிவிக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது என அவர் கூறினார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஷெர்மிலா கோனவலா மேலும் கூறுகையில், தகனம் மற்றும் கல்லறைக் கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. “CMC வசூலிக்கும் புதிய தொகைகளை மக்களால் ஈட்ட முடியாது,” என்று அவர் கூறினார்.