கடந்த 3 ஆண்டுகளில் அனுமதிக்கப்படாத முறைகளின் கீழ், 2,367 மாணவர்கள் கல்வி அமைச்சினால் பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான விசேட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி,
குறித்த காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்டு மாணவர்களை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவற்றில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.