கொழும்பு – புறக்கோட்டை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ விபத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27ம் திகதி பாரிய தீ பரவியிருந்தது.
இந்த தீ விபத்தினால் சுமார் 20திற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்த சம்பவத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.