மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதமே திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, 4,500 கிகாவோட் மணிநேரம் நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்ட போதும், 3,750 கிகாவோட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவோட் மணிநேரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்காக மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் மேலதிக தொகையை ஈடுசெய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தரவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மின்சார சபையின் கோரிக்கையை பரிசீலிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக கடந்த காலங்களில் பல தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது