இலங்கை – இந்திய ஒப்பந்தம் போன்று முஸ்லிம்களின் முதுகில் இன்னுமொரு அடிமைச் சாசனத்தை எழுதுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமஸ்டி என்று எது முன் வைக்கப்பட்டாலும் அதில் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்றால் அவற்றை நாம் வரவேற்பதற்கு தயாராகவே இருக்கிறோம். நாம் அரசியல் தீர்வுக்கு எதிரானவல்லர்.
முஸ்லிம்களின் எதிர்காலம் பாதுகாக்கபட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழர் தரப்பினர் தொடர்ந்து ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின் அபிலாசைகளை எந்த விதத்திலும் கருத்திற் கொள்ளாமலும் உள்ளார்கள்.
வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது முஸ்லிம்களுக்கு பல அநீதிகள் நடைபெற்றுள்ளன. முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும் பல இடங்களில் முஸ்லிம்கள் ஆயுதக் குழுக்களினால் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இணைந்த வடக்கு, கிழக்கு நிர்வாகத்தில் பல உயர் பதவிகள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன.
மொத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு நிர்வாகத்தில் முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளே நடைபெற்றன. ஆகவே, இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்று தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் தெரிவித்தார்.
முஸ்லிம்களிடம் அபிப்ராயங்கள் பெற்றுக் கொள்ளப்படாமலேயே இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுமார் 34 வீதமாக இருந்த முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் வடக்கு, கிழக்கு இணைப்பால் 17 வீதமாக மாற்றப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW