முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதவான் தலைமையில் இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச நியதிகள் பின்பற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்த கலந்துரையாடலில் பிரசன்னமாகும் தரப்பினர் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தனர்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29ம் திகதி குழாய் பொருத்தும் பணிகளுக்கான அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கிருந்து மனித எச்சங்கள் சில அவதானிக்கப்பட்டன.
இதையடுத்து, முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைவாக கடந்த 6ம் திகதி பூர்வாங்க அகழ்வு பணிகளை நடத்தி மனித புதைக்குழியொன்று உள்ளதை உறுதிப்படுத்தியிருந்தனர்
இந்த நிலையிலேயே, இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.