ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.
இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறும்போது, வார இறுதியில், இஸ்லாமிய புனித மாதம் ரமலான் முடிவையொட்டி, சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதனை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.