உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பகுதியில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.