இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது.
மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை ஆலையில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
அந்த பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகை கட்டுக்குள் வரும் வரை, குழந்தைகளின் நலனைக் கருதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாமென உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிடைத்த தகவலின்படி, தீ விபத்து தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது எனவும், விரைவிலேயே முழுமையாக அனைத்து தீயும் அணைக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல கழிவு மேலாண்மை ஆலைகளில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
பெரும்பாலும் குப்பை கிடங்குகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்கும்போது, உருவாகும் மீத்தேன் வாயுக்கள் இது போன்ற தீ விபத்துகளை ஏற்படுத்துகிறது.