பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாணியில் 2000 கோடி ரூபா இணைய மோசடி தொடர்பில் சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை மிக நுணுக்கமாக ஏமாற்றி இணைய வழியால் சுமார் 2000 கோடி ரூபா மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
40% முதல் 90% வரையான வட்டி வீதத்தில் பணம் தருவதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்தி சுமார் இரண்டு வருடங்களாக இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதிபர்கள், பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், பிரபுக்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிதி மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இணையத்தில் நிதி மோசடிகள் வேகமாக அதிகரித்துள்ளன.
சிலர் வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபா கடன் பெற்று, ஒன்லைன் மோசடி செய்பவர்களிடம் அதிக சலுகைகளைப் பெறுவதற்காக பணத்தைக் கொடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இணையத்தில் மிக நுட்பமான முறையில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்காது அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.