ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் நேற்றிரவு (நவ.18) கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மருதானை பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (நவ.19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.