இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல் தடவையாக தனுஷ்க குணதிலக்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் (37154233.98) பிணையில் கீழ், நிபந்தனை அடிப்படையில் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய யுவதியுடன், தனுஷ்க குணதிலக்க பயணம் செய்த பகுதிகளில் காணப்படும் சிசிடிவி காணொளிகளை பெற்றுக்கொள்வதற்கு அந்த நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி வழங்கியது.
உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தொடருக்கான அவுஸ்திரேலியா சென்ற தனுஷ்க குணதிலக்க, யுவதியொவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
தன்னை பாலியல் வல்லுறவுக்கு தனுஷ்க குணதிலக்க ஈடுபடுத்தியதாக குறித்த யுவதி, அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னணியில், தனுஷ்க குணதிலக்க இந்த மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.