பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வந்தது.
எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல.
எனவே, எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று இந்தச் சபையில் பரிந்துரைக்கின்றேன்.
இவ்வாறு வழங்கப்படுவது கடன் என்பதால் தேயிலை சபை ஊடாக தலையிட்டு அரசு இந்த முற்பணத்தை வழங்க முடியும்” – என்றார்.
இதற்குப் பதிலளித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, “இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடன்களை வழங்க ஆவண செய்யுமாறு தேயிலை சபைக்கு அறிவித்துள்ளேன்” – என்றார்.