நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரியும் சகோதரனும் கொல்லப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நவகத்தேகம முல்லேகம பகுதியைச் சேர்ந்த அனுஷா குமுதுனி (வயது 27) மற்றும் அனுர சம்பத் (வயது 33) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் என்றும், அந்த சகோதரி திருமணமாகி ஒரு குழந்தையின் தாய் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கட்டடவேலை செய்பவர் என்பதும், அவர்களுக்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், எனவே, குழந்தையை பிரிந்து சில காலமாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ தினத்தன்று இரவு வேளையில் தனது வீட்டு மாடியில் யாரையோ பார்த்த பெண், பக்கத்து வீட்டில் வசித்து வந்த தனது சகோதரனிடம் சத்தம் போட்டு கூறியதையடுத்து, சத்தம் கேட்டு சகோரனும் அவரது மனைவியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சகோதரியின் கணவன் கூரை மேல் இருந்ததை அவரது சகோதரன் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தினால் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் (இறந்த பெண்ணின் கணவர்) பொலிஸ் பாதுகாப்பில் காயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.