கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முற்கூட்டியே கிடைத்த தகவலுக்கு அமைவாக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
L
அதற்கமைய, குறித்த வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கிப் பயணம் செய்வதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப் வண்டி மூலம் குறித்த வேனை நுணுக்கமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேனை வீதியோரமாக நிறுத்தியுள்ள நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வேனைப் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது வேனின் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியவாறு வேனைப் பல தடவைகள் உடனடியாக முன்னும் பின்னுமாக இயக்கியதுடன், பொலிஸ் ஜீப் மீதும் மோதி உத்தியோகத்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேன் நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வேனின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சாரதியைப் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


