நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.95 பில்லியன் டொலர்

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மத்திய அரசாங்கத்தின் கடன் மட்டும் 31.999 டிரில்லியன் ரூபா அல்லது 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் 20 மில்லியன் டொலர்கள் என்றும், அரசாங்கப் பிணையுடனான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் 57 பில்லியன் டொலர்கள் 

கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக அல்லது 19.203 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகச் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் செலுத்தப்படாத திறைசேரிப் பிணைமுறிகளின் அளவு 47.732 பில்லியன் டொலர்கள் அல்லது 16,069 பில்லியன் ரூபா எனவும், செலுத்தப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவு 7.045 பில்லியன் டொலர்கள் அல்லது 2,372 பில்லியன் ரூபா எனவும் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டுக் கடன் 38 பில்லியன் டொலர்களைத் தாண்டியது 

கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 38.008 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் இறுதியில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டின் இறுதியில் 38.008 பில்லியன் டொலர்கள் வரை 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகச் சம்மந்தப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அந்த வெளிநாட்டுக் கடன்களில் பலதரப்புக் கடன்களாக 14.802 பில்லியன் டொலர்களும், வர்த்தகக் கடன்களாக 12.409 பில்லியன் டொலர்களும் மற்றும் இருதரப்புக் கடன்களாக 10.797 பில்லியன் டொலர்களும் பதிவாகியுள்ளன.

இருதரப்புக் கடன்களில் சீனா முன்னிலையில் 

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை, இருதரப்புக் கடன்களை நாடுகளின் அடிப்படையில் கருத்திற்கொள்ளும்போது, சீனாவிற்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கடனாக 5.0067 பில்லியன் டொலர்கள் உள்ளதாக மேலும் சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு மேலதிகமாக, ஜப்பானுக்கு 2.2727 பில்லியன் டொலர்களும், இந்தியாவிற்கு 853.9 மில்லியன் டொலர்களும் கடனாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. .

பலதரப்புக் கடன்கள் 

பலதரப்புக் கடன்களில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்குச் செலுத்தப்படாத கடன் 6.8851 பில்லியன் டொலர்கள், உலக வங்கிக்கு 4.6662 பில்லியன் டொலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு 2.6152 பில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச இறையாண்மைப் பிணைமுறைகளின் கீழ் 10 பில்லியன் டொலர்கள் 

நாட்டின் வெளிநாட்டு வர்த்தகக் கடன்களின் அளவு 12.4091 பில்லியன் டொலர்கள் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதில் சர்வதேச இறையாண்மைப் பிணைமுறைகளின் கீழ் 10.0071 பில்லியன் டொலர்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன ஆசிய அபிவிருத்தி வங்கியின் தவணைக்காலக் கடன் வசதிகளின் கீழ் மேலும் 2.402 பில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்களின் கீழ் உள்ளதுடன், கடந்த 2024 ஆம் ஆண்டில் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய இறையாண்மைப் பிணைமுறைகளின் முதிர்வு திகதிகள் 2028 முதல் 2038 வரையிலான காலப்பகுதியில் உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாவது காலாண்டில் கடன் சேவை செலுத்தல் 2,698.6 பில்லியன் ரூபா 

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் சேவை செலுத்தல் தொகை 2,698.6 பில்லியன் ரூபாவாகும் என அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் உள்நாட்டுக் கடன்களுக்கான வட்டி உட்படச் செலுத்தல்களாக 2,441.6 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டுக் கடன்களுக்காக 257.0 பில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டுக் கடன் செலுத்தல்களை அமெரிக்க டொலர்களின் மதிப்பில் கருத்திற்கொள்ளும்போது, முதன்மைச் செலுத்தல்களாக 573.9 மில்லியன் டொலர்களும், வட்டிச் செலுத்தல்களாக 230.4 மில்லியன் டொலர்களும் என மொத்த வெளிநாட்டுக் கடன் சேவைச் செலுத்தல்கள் 804.3 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளன.

கடன் மறுசீரமைப்பு இன்னும் முழுமையடையவில்லை 

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, அதிகாரபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (Official Creditor Committee), சீன எக்சிம் வங்கி, சீன அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச இறையாண்மைப் பிணைமுறி உரிமையாளர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கான பல முக்கிய நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச இறையாண்மைப் பிணைமுறிப் பரிமாற்றம் 2024 டிசம்பரில் தோராயமாக 98% பங்கேற்பு வீதத்துடன் முடிவடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஹங்கேரி, சவுதி நிதியம், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்பு மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கடன் பங்குதாரர்களுக்கு சாதாரணக் கடன் சேவையாற்றல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், 13 நாடுகளுக்குச் சொந்தமான கடன் சேவையாற்றல் தொடர்பான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு...

பிரதி அமைச்சர் தலைமையில் அமைந்தது புதிய வைத்தியர் குழு!

வைத்திய அதிகாரிகளுக்காக இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது குறித்த யோசனையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.   சுகாதார மற்றும்...