தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு 3 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு பிற்பகல் 1.30 அளவில் நிறைவடைந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஷ் நிர்மலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அதில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் குறித்த சந்திப்பை புறக்கணித்திருந்தது.
அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலிசப்ரி மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் உடனடியாக நிறைவேற்ற கூடிய 4 விடயங்கள் தொடர்பில் இன்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது மற்றும் காணி பிரச்சினை உள்ளிட்ட 4 விடயங்கள் தொடர்பில் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.