அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச உள்ளிட்ட தலைவர்களின் 11 கூட்டணிக் கட்சிகள் அடங்கிய அணி அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாத அணி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த கூட்டணிக் கட்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அணியினர் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் இறைச்சி எலும்பின் அளவு குறைந்ததன் காரணமாக புலம்பும் கூட்டம். இதனால், இந்த அணியினருக்கு அரசாங்கத்துடன் இருக்கும் மோதல் கொள்கை ரீதியான மோதல் அல்ல.
இந்த அணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருந்து வரும் மோதல் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றல்ல எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
11 கட்சிகள் அடங்கிய அணியின் பிரதான பிரமுகரான விமல் வீரவங்ச, மக்கள் விடுதலை முன்னணியின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். எனினும் கடந்த காலம் முழுவதும் அவர் மக்கள் விடுதலை முன்னணியை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.