ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சட்ட மீறல்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ் இன சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளிலும் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாகவும், அவ்வாறான இரண்டு சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹரேந்திரன் கிருஷ்ணசாமி ஏ24 செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘இலங்கையில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நாம் அதிகம் பார்த்துள்ளோம். கடந்த மாதம் முல்லைத்தீவில் இருந்து அவ்வாறான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இன்னும் அவர்கள் யார் என்று கூட தெரியவில்லை அத்துடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு ஊடகவியலாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக அவரது நாளாந்த ஊடகச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக பல செய்திகள் பதிவான போதிலும், அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவதாக நாங்கள் இன்மும் அறியவில்லை.
‘ஒரு நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அவசியம் எங்கு பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதோ அங்கு சர்வாதிகாரமும் அராஜகமும் தலைவிரித்தாடும் இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகத்திற்கே பாடமாக மாறியுள்ளது.
எனவே, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமையாகும். இந்த கருத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து எமது கருத்துக்களை பதிவு செய்து தொடர்ந்து பேசுவோம் என தெரிவித்தார்.