மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று நேற்று ( 20 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
சமய மதகுருமார்கள், இலங்கை அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச துறைஅதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்துகொண்டனர். அத்தோடு, மறைந்த பிரியங்க குமாரின் மனைவி திருமதி நிலுஷி திஸாநாயக்க மற்றும் அவரது பிள்ளைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மத மரபுகளின்படி இறந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் ஃபரூக் பர்கி எச்ஐ (எம்) கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார். இஸ்லாம் அமைதி, நீதி மற்றும் சகிப்புத்தன்மையின் மதம் என்றும், பாகிஸ்தானியர்கள் அன்பானவர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆனது விருந்தோம்பும் தேசம் என்றும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார். இத்தகைய சோகமான சம்பவங்கள் இஸ்லாம் அல்லது பாகிஸ்தானை எந்த வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையுடன் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு உறவுகளையும் நட்புறவையும் வளர்ப்பதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மேலும் உறுதிப்படுத்தினார்.
திருமதி நிலுஷி திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், இழப்பீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தோடு, வழக்கின் விரைவான விசாரணையை அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்