ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றினார்.
இதன்போது அவர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை.மாறாக அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்தின் வாழ்வாதார செயற்பாடுகளில் ஒத்துழைக்கவேண்டும் என்று வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுக்கு அவர் அழைப்பு விடுத்ததில் எவ்வித யதார்த்தமும் இல்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்காகவே மக்கள் அதற்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த கொள்கைகளை விட்டுவிட்டு எவ்வாறு செயற்படமுடியும் என்று சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.அத்துடன் இலங்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென்ற அடிப்படையிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் தமது அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை, ”மிக மோசமான உரை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.