நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜார்டோ, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு, இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹ்மத பிரபு மற்றும் கொரியாவின் தேசிய சட்ட மன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்- சேக் ஆகியோர் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளனர்.
ஹங்கேரியின் வெளி விவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ இலங்கையில் நாளை(12) தமது களவிஜயத்தை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இங்கிலாந்தின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹ்மட் பிரபு ஜனவரி 18ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.
கொரியத் தேசிய சபையின் சபாநாயகர் ஜனவரி 19 ஆம் திகதி இலங்கை வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாத இறுதியில் இலங்கை வருவாரென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரச சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ கடந்த தினம் தமது இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்திருந்தார்.
சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றமையை இந்த விஜயங்கள் எடுத்துக் காட்டுவதாக வெளி விவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.