நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று (22) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் விநியோகத் தடை 30 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்த காரணத்தினால் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
இந்நிலைமையை சீர் செய்வதற்கு சுமார் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலார்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கங்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த மின்வெட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையில் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இது தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அதன் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.