2022 பாதீட்டின் மூலம் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், 16,000 ரூபா வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இலங்கையில் உள்ள அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் இதனால் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்களும் அவர்களை நம்பி வாழும் ஏறக்குறைய 6 மில்லியன் மக்களும் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்குமாதாந்தம் 58,000 ரூபா அவசியம் என அண்மைய கணக்கெடுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதால் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலைமை தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அவதானம் செலுத்தப்படாவிடின், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஈடுபடபோவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரச அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி. பஸ்நாயக்கவின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.