ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக, ஈரான் இன்று புதன்கிழமை (18) வளைகுடா நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்கியுள்ளது.
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணைகள் அந்நாடுகளின் முக்கிய ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்தன.
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதுடன், ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட போது சிதறிய பாகங்கள் விழுந்ததில் பொதுமக்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படையினர் ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகளை வெற்றிகரமாக முறியடித்த போதிலும், சில ட்ரோன்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் அங்கு விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதேபோல், குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினர் ஏழுக்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஏவப்பட்ட ஆறு ட்ரோன்களை அந்த நாட்டு ராணுவம் அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாகப் போரின் பிடிக்குள் சிக்கியுள்ளன.
ஈரானின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவம் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அருகே உள்ள ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் கடற்கரை ராணுவ நிலைகளை அழிப்பதே தங்களது நோக்கம் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை பெய்ரூட்டில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் ரஷ்யா தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தின் அருகே ஒரு மர்மப் பொருள் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கதிரியக்கக் கசிவு இல்லை என்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர்ச் சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன், உலகப் பொருளாதாரம் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் ஈரானுக்கு எதிராகத் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், இப்பகுதியில் அமைதி திரும்புவது தற்போதைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகத் தெரிகிறது.






