ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது.
இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், இது ஈரானிய அரசியலமைப்பின் அடிப்படையில் அந்நாட்டுத் தரப்பால் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும் எனத் தெரிவித்தார்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்ததுடன், அந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றியமைக்க முயலும் வெளிப்புற முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வண்ணப் புரட்சியைத் திட்டமிடுவதோ அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதோ மக்களிடையே எவ்வித ஆதரவையும் பெறாது.
மத்திய கிழக்கின் விவகாரங்களை அந்தந்த பிராந்திய நாடுகளே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.






