அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’ பகுதியில் அமைந்துள்ள கட்டளை மையத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு படையினர் உயிரிழந்துள்ளனர். விமானப் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மூவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட போதிலும், காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாலும், இடிபாடுகளுக்கு இடையே மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் நால்வர் அமெரிக்க இராணுவத்தின் ரிசர்வ் படையில் பணியாற்றியவர்கள் ஆவர். அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
-
கெப்டன் கொடி கோக் (வயது 35)
-
சார்ஜன்ட் நோவா டீட்ஜென்ஸ் (வயது 42)
-
சார்ஜன்ட் நிக்கோல் அமோர் (வயது 39)
-
சார்ஜன்ட் டெக்லான் கோடி (வயது 20)
ஆயுதமேந்திய செயற்பாட்டு மையமொன்றின் மீது சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றின் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
இதேவேளை, குவைத்தில் இடம்பெற்ற “தவறுதலான தாக்குதல்” காரணமாகத் தமது மூன்று போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த விமானங்களின் விமானிகள் உயிர் தப்பியுள்ள போதிலும், குறித்த விமானங்களைத் தாங்களே சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.






