முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
பணிப்புறக்கணிப்புக்கு அரசாங்கம் உறுதியான தீர்வை வழங்காவிடின் நாளை வெள்ளிக்கிழமை (27) மீண்டும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்போம் என இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்து கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.இந்த விடயம் குறித்து விடயதானத்துக்கு பொறுப்பான மின்சாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அறிவுத்தினோம் அதற்கும் பதில் கிடைக்கவில்லை.
மின்சாரத்துறை அமைச்சருடன் மூன்று தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதன் பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.வலுசக்தி அமைச்சரின் செயற்பாடுகள் அதிருப்திக்குரியன. இவர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் 24 மின்சார தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து இன்று நண்பகல் 12 மணிமுதல் மாலை 06 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வைத்தியசாலை கட்டமைப்பு, பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது. அத்தியாவசிய சேவைகளில் வழமை போல ஈடுபடுவோம்.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை அரசாங்கம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக கருதி தீர்வு வழங்க வேண்டும். இன்றை போராட்டத்துக்கும் முறையான பதில் கிடைக்காவிடின் நாளைய தினம் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 77 இலட்ச மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.






