இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக, முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார். இதன்படி, ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி மழையால் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் போட்டிக்கும் மழையின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எனினும், பல்லேகலயில் தற்போது மழை ஓய்ந்து வானம் தெளிவாகக் காணப்படுவதால் போட்டி திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், போட்டியின் இடையிலும் மழை பெய்வதற்கான 87 சதவீத சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இதே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரை 3-0 என இலங்கை இழந்திருந்த போதிலும், குழுநிலைப் போட்டிகளில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா போன்ற அணிகளை வீழ்த்திய நம்பிக்கையுடன் இலங்கை அணி இன்று களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






