2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டு 15 நாடுகளை இலக்காகக் கொண்டு உலகளாவிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இலங்கையின் நற்பெயரை உலக மட்டத்தில் மிகவும் சிறந்ததொரு நிலைக்குக் கொண்டுவர நாம் வெற்றி கண்டுள்ளோம். அதற்கமைய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. பெப்ரவரி 15 ஆம் திகதியளவில் சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் பாரியதொரு எண்ணிக்கையாகும்.”
“எமது உலகளாவிய விளம்பரத் திட்டத்திற்காகச் சுமார் 2 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம். 15 நாடுகளை இலக்காகக் கொண்டே இது முன்னெடுக்கப்படுகின்றது.”
“விசேடமாக டி20 கிரிக்கெட் தொடரைக் குறிப்பிட வேண்டும். அதனூடாகவும் சுற்றுலாத்துறையில் பாரிய ஈர்ப்பையும் வருகையையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. கொழும்பில் எமக்கு இருந்த ஒரு சவால்தான் ஹோட்டல் அறைகளின் பயன்பாட்டு வீதம். தற்போது அது நூற்றுக்கு நூறு வீதம் என்ற அளவிலேயே உள்ளது. கொழும்பிலுள்ள அறைகளுக்கு நல்லதொரு கேள்வி நிலவுகிறது.” எனப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.






