குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.
வழக்கின் சாட்சி விசாரணை நடைபெறவிருந்த போதிலும், சட்டத்தரணிகளின் பணிபகிஸ்கரிப்பால் விசாரணை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் பத்தரமுல்லையில் வைத்து N.50191386 எனும் இலக்கமுடைய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.






