மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய இன்றைய தினம் (09) மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (09) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், வருமான வரிப் பரிசோதகர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சிக் குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைப் பிரிவுகளிலும் நாளை (10) முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட புதிய விலைகள்:
1 கிலோ தனி இறைச்சி: 2,200 ரூபாய்
1 கிலோ முள் இறைச்சி (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்): 2,000 ரூபாய்
1 கிலோ தனி முள்ளு: 1,200 ரூபாய்
1 கிலோ ஈரல்: 2,500 ரூபாய்
அத்துடன் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.






