சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
சபாநாயகர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாளர்கள் குழுவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக நேற்றுமுன்தினம்(07) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.
இதில் சபாநாயகருக்கு எதிராக 08 ஊழல், மோசடிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெறுதல், வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பாராளுமன்ற ஊடகப் பிரிவுக்குச் சொந்தமான உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் பாராளுமன்றக் கணக்கின் கீழ் கூடுதல் மதிய உணவு வசதிகளைப் பெறுதல், விசாரணை அதிகாரியை சட்டவிரோதமாக நியமித்து பாராளுமன்றக் கணக்கிலிருந்து அவருக்கு பணம் செலுத்தி உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், அரசுக்குச் சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை வழங்க சட்டவிரோதமாக மறுத்தல் மற்றும் அவரது ஊழல் மற்றும் மோசடியை மறைக்க முயற்சித்தல், பாராளுமன்ற ஊழியர்களின் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக தலையிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளன.






