கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனவரி 31 (சனிக்கிழமை) மற்றும் பெப்ரவரி 01 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களிலும் மாலை 06:30 மணி முதல் பெரஹெரா நிறைவடையும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குகள் அமுலில் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரஹெரா காலப்பகுதியில் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் பொருட்டு இந்த விசேட வீதி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.






