அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஏனைய இழப்பீடுகளை வழங்குவதற்காக அரச அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களில் கம்பஹா மாவட்டத்தில் 73.4 சதவீதத்தினருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05 சதவீதத்தினருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05% சதவீதத்தினருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68.39% சதவீதத்தினருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 65.28% சதவீதத்தினருக்கும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 61.42 சதவீதத்தினருக்கும் இதுவரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில மாவட்டங்களில் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கல் 50% க்கும் குறைவாகவே காணப்படுவதாகவும், இந்நிலையைத் துரிதப்படுத்த அதிகாரிகள் தற்போது தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான சிக்கல்களைக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“இந்த அனர்த்தத்தினால் சுமார் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அனர்த்தத்தினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். இப்போது அரச அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்து சிலவற்றை மதிப்பிட்டு வருகின்றனர், சிலவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்த 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் நேற்று வரையான நிலவரப்படி 50%க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம். சில மாவட்டங்களில் இது இன்னும் 50% க்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்தவே நாங்கள் தலையிட்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்.






