பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக இறந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் பெறப்படவில்லை, பல மாணவர்களின் அனைத்து பாடசாலை புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் பிற பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பாடசாலைகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாகவும், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் மன நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாட்டில் 275,000க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






