தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினால் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும் அதில் இருந்த 6 மீனவர்களும் நேற்று (20) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்படி, அந்தப் படகில் இருந்து 5 பைகளில் 100 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 13 பைகளில் 200 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 261 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த போதைப் பொருள் தொகையுடன் ஒரு ரிவோல்வர், ஒரு பிஸ்டல் மற்றும் இரண்டு மெகசீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.






