திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது.
வீரர்கள் மற்றும் பணிக்குழாமின் பாதுகாப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யுமாறு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இந்த பணிப்புரையை மீறி, நாடு திரும்பும் எந்தவொரு வீரர், பணிக்குழாமின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும் மற்றும் அவர்களது ஒப்பந்தம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் பாதுகாப்பு காரணிகளை கருத்திற் கொண்டு நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
இது தொடர்பில் உடன் கவனம் செலுத்திய ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வீரர்கள் மற்றும் பணிக்குழாமினரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை வீரர்கள் நாடு திரும்பினால் இந்த தொடரை பூர்த்தி செய்வதற்காக மாற்று அணி ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கான தயார்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






