மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் ஒருவர், நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வரும் சிற்றூழியரான இந்தப் பெண், திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது
சம்பவத்தன்று ( 22), அவர் வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார். இதன் போது, வயிற்று வலி ஏற்பட்டதால் அங்குள்ள மலச்சல கூடத்திற்குச் சென்று, யாருக்கும் தெரியாமல் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
பிறகு, அக்குழந்தையைப் பெட்டி ஒன்றில் மூடி, கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு, தனது கடமைகளைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், அவருக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததை அவதானித்த தாதியர் ஒருவர், அவரை வார்டில் அனுமதிக்கச் செய்தார்.
அங்கு சோதனை செய்த வைத்தியர்கள், அவர் குழந்தைப் பெற்றுள்ளதை கண்டறிந்தனர்.
அதனையடுத்து, தேடியபோது, பெட்டியில் போடப்பட்டு கட்டிலின் கீழ் மறைக்கப்பட்டிருந்த குழந்தை, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
குறித்த சிற்றூழியரின் கணவரும், குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராகவே கடமையாற்றி வருகிறார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கணவன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் கர்ப்பம் தரித்திருந்தது வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கோ அல்லது யாருக்கோ தெரியவில்லை.
38 வாரங்கள் முழுமையான கர்ப்பத்தில், 2 கிலோ 485 கிராம் எடையுள்ள பெண் குழந்தையை அவர் பிரசவித்திருந்தார்.
இச்சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்கள் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த குழந்தையின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிரிந்த கணவன் “அக்குழந்தை தனக்குப் பிறக்கவில்லை” எனத் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் மற்றும் தந்தையின் இரத்த மாதிரிகளைப் பெற்று, டிஎன்ஏ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு (CID) பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.