மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம். எல். ஏ.எம் ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா எம்.பி தமது கேள்வியின் போது,
1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் மக்கா சென்று திரும்பிய முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர்.அது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸி முறைப்பாடு செய்யப்பட்டதுடன் அதனையடுத்து நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது சர்வதேச நியதிகளுக்கு அமைய அதனை அகழ்வு செய்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது அதற்கமைய அது தொடர்பிலான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் எனக்கேட்டார்.
இதற்கு பதிலளித்த நீதி யமைச்சர்,
மேற்படி சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நீதி அமைச்சிடம் போதிய நிதி உள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பீட்டுக்கு இணங்க நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அதற்கான நடவடிக்கைகளில் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும். அதற்காக தேவைப்படும் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது என்றார்.