சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப் பேசும் முன் நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
இன்று (06) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு இந்தியா இலங்கைக்கு விட்டுத்தந்ததல்ல. சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவிடம் கையளித்தார்.
இலங்கையிடம் கச்சதீவு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் 1600 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி பழமையான ஆவணங்கள் உள்ளன.
ஐ.நா அமைதிப் பணியில் மூன்று தசாப்தங்கள் பணியாற்றிய இந்திய நிபுணர் கண்ணன் ராஜரத்தினமும் “சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது, இந்தியாவிடம் இதை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
“ஆகையால், முன்னாள் நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான விஜய், கச்சதீவு குறித்து பேசுவதற்கு முன், இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ஆழ்வலை மீன்பிடி முறையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அவர்களுக்கு முன்னெடுக்க வேண்டும்,” ஏனெனில் கச்சதீவை விட முக்கியமான விடயம் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய ஆழ்வலை மீன்பிடி முறையாகும்.
விஜய், சீமான் போன்றோர் உண்மையாக மக்கள் நலனை சிந்தித்திருந்தால் வன்முறை மற்றும் பெண்களைப் போகப்பொருட்களாக காட்டும் சினிமாவை விட்டு, Children of Heaven, The Pianist போன்ற கலையுணர்வுள்ள படங்களை எடுத்திருப்பார்கள்.
இவர்களின் சினிமாவாலும் மக்களுக்கு பயன் இல்லை, இவர்களின் அரசியலாலும் மக்களுக்கு பயன் இல்லை, சீமான் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசுவது உண்மையான அக்கறையால் அல்ல, வெளிநாட்டு இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் குறிவைத்தே.
உண்மையான அக்கறை இருந்திருந்தால், இந்திய அகதி முகாம்களில் இன்னும் துன்புறும் இலட்சக்கணக்கான இலங்கை அகதிகளின் பிரச்சினைகளுக்கு முதலில் கரிசனை காட்டியிருப்பார் என தெரிவித்தார்.